பனையேறி சுந்தரம் - சிறுகதை
வடாற்காடு மாவட்டத்தில் ஓரளவு நீர் வளம் கொண்ட எங்கள் பகுதியில் கைத்தறி நெசவும், விவசாயமும் தான் பிரதான தொழில்கள். சிறு வயதில் இருந்தே வீட்டில் அப்பாவுடன் தறி வேலைக்கும், விவசாய வேலைக்கும் செல்வது வழக்கம். வீட்டில் இருந்து சரியாக ஒன்றரை கிலோ மீட்டருக்கும் கொஞ்சம் அதிகமான தூரத்தில் எங்கள் கழனி உள்ளது. அறுவடை நேரங்களில் அப்பா கழனியிலேயேத் தங்கிவிடுவார், நான் தான் அவருக்கு மாலையில் சாப்பாடு கொண்டு போவேன். ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் எங்கள் கழனி இருப்பதால் கிணற்றில் எப்போதும் நீர் இருக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகப் பொய்த்துப்போனப் பருவ மழையால் ஏரி வெடிப்புற்றுக் காய்ந்துபோய் இருந்தது. ஆங்காங்கே மழைநீர் சேகரிப்புக்காக 100 நாள் வேலை திட்டம் மூலம் பெண்களால் குறுக்கும், நெடுக்குமாகப் பள்ளங்கள் வெட்டப்பட்டு இருந்தன. அந்தப் பள்ளங்களுக்கு இடையில் என் மிதிவண்டி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. எந்நேரம் ஆனாலும் ஏரிக்கரைகளில் இருக்கும் வானுயர்ந்த நெடும் பனைகளைப் பார்க்காமல் நான் போனது இல்லை. ஐந்து கிலோமீட்டருக்கும் மேல் நீளமுள்ள ஏரியின் இரு கரைகளையும் அந்தப்