பனையேறி சுந்தரம் - சிறுகதை

 

 

      வடாற்காடு மாவட்டத்தில் ஓரளவு நீர் வளம் கொண்ட எங்கள் பகுதியில் கைத்தறி நெசவும், விவசாயமும் தான் பிரதான  தொழில்கள். சிறு வயதில் இருந்தே வீட்டில் அப்பாவுடன் தறி வேலைக்கும், விவசாய வேலைக்கும் செல்வது வழக்கம். வீட்டில் இருந்து சரியாக ஒன்றரை கிலோ மீட்டருக்கும் கொஞ்சம் அதிகமான தூரத்தில் எங்கள் கழனி உள்ளது. அறுவடை நேரங்களில் அப்பா கழனியிலேயேத்  தங்கிவிடுவார், நான் தான் அவருக்கு மாலையில் சாப்பாடு கொண்டு போவேன்.



    ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் எங்கள் கழனி இருப்பதால் கிணற்றில் எப்போதும் நீர் இருக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகப்  பொய்த்துப்போனப் பருவ மழையால் ஏரி வெடிப்புற்றுக் காய்ந்துபோய் இருந்தது. ஆங்காங்கே மழைநீர் சேகரிப்புக்காக 100 நாள் வேலை திட்டம் மூலம் பெண்களால் குறுக்கும், நெடுக்குமாகப்  பள்ளங்கள் வெட்டப்பட்டு இருந்தன. அந்தப் பள்ளங்களுக்கு இடையில் என் மிதிவண்டி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.


    எந்நேரம் ஆனாலும் ஏரிக்கரைகளில் இருக்கும் வானுயர்ந்த நெடும் பனைகளைப்  பார்க்காமல் நான் போனது இல்லை. ஐந்து கிலோமீட்டருக்கும் மேல் நீளமுள்ள ஏரியின் இரு கரைகளையும் அந்தப்  பனைகளே ஆக்கிரமித்து இருந்தன. அவ்வழியாகச் செல்கையில் ஏக்கத்தோடு அவைகளைப் பார்த்துக் கடந்து போவேன். இரு கரையில் இருந்த பனைகள் ஒன்றை  ஒன்று சூழ்ந்து ஒரு குகை பாதை போலக் காட்சி தரும், அதனுள் புகுந்து போகும் போது காற்றில் சலசலத்து மரத்தின் ஓலைகள் ஏழுப்பும் சத்தம் உள்ளுக்குள் பயத்தை ஏற்படுத்தி மிரளவைக்கும்.


   ஒரு நாள் அந்த நெடும்பனைகளின் உச்சியை நிலை கொள்ளாது பார்த்துக் கொண்டிருந்த போது,

"ஏன்டா தம்பி இப்படி வாய பொளந்து பார்க்குறே, இன்னும் கொஞ்ச மாசம் தான் பிறகு நுங்கு கிடைச்சிடும்" எனச்  சொல்லிக் கொண்டே மரத்தின் மேலே இருந்து ஊர்ந்து வரும் பாம்பைப் போன்று, பதனீர்க்குடத்துடன் கீழ் இறங்கி வந்தார் பொற்சுந்தரம் அண்ணா. சிறிய வயதில் எனக்கு நுங்கு மரத்தினை அறிமுகப்படுத்தியது அவர் தான். ஆம், பனை என்றால் என் நினைவில் அது நுங்கு மரமாகத்தான் இருந்தது.


     ஊரில் பனைமரங்கள் அதிகம் என்றாலும் பனையேறும் சமூக மக்கள் ஒருசில குடும்பம் தான் இருந்தது. பெரும்பாலும் ஆடு மேய்ப்போர் ஆட்டிற்கு இலை, தழைகளை வெட்டிப்போடத்  தங்களோடு நீண்ட தொரட்டு அருவாளை கொண்டுச் செல்வர். அவர்களிடம் சொன்னால் மரம் ஏறாமல் கீழ் இருந்தபடியே நுங்குக் குலைகளை அறுத்துப் போடுவர். கோடைகாலம் என்பதால் நுங்கு விற்பனை அவர்களுக்குக்  கணிசமான வருமானத்தையும் கொடுக்கும். அதனால் ஆண்டின் சில மாதங்களுக்கு மட்டும் நிறைசூழ் பெண்களைப் போன்ற கவனிப்புகள் கருவுற்ற அந்தப் பனைகளுக்கும் கிடைக்கும்.


     பள்ளி விடுமுறை நாட்களில் சுந்தரம் அண்ணாவுடனேச்  சுற்றிக்கொண்டு இருப்பேன். காலை விடியும் முன் அவர் தன் பழைய வேட்டியைக்  கட்டிக் கொண்டு மட்டை அரிவாள், பாளை அரிவாள், சுண்ணாம்புப்பெட்டி போன்றவைகளை இடுப்பில் கட்டப்பட்டத்  தென்னை மரத்தின் கொதுபில் வைத்துக் கொண்டு, கையில் முறுக்குத்தடி, தலை நார்கயிறு ( இடைகயிறு போட்டும் சில நேரம் ஏறுவார்) எனப்  போர் வீரனைப் போல் தன் பனை படை பலங்களோடு பனைத் தொழிலுக்கு செல்வார். எனக்கு நினைவு தெரிந்து ஒரு நாளும் அவருக்கு முன் நான் எழுந்து போனதில்லை. குறிப்பாக, ஒவ்வொரு நாள் காலையில் மரம் ஏறும்போது அதனைத்  தெய்வமாக வழிபட்டு விட்டே ஏறுவார், ஆண்டிற்கு ஒரு முறை பனை ஓலைகளை வட்டமாக அடுக்கி வைத்துப் படையல் போடுவார்கள். அதற்குக் கும்பிடு பனை என்று பெயராம், தம்மைக் காக்கும் பனைக்கு நாம் செலுத்தும் காணிக்கை எனச் சொல்வார்.

    அண்ணாவிற்குச்  சொந்தமாக நிலம் இல்லாததால் எங்கள் நிலத்திலும், ஏரிக் கரைகளிலும் இருந்தப்  பனைகளை வருட குத்தகைக்கு எடுத்து மரம் ஏறுவார். (பனையுடன் வாழும் பெரும்பாலானப்  பனையேறிகளுக்குச் சொந்த நிலமோ, பனைமரமோ இருப்பதில்லை) சுந்தரம் அண்ணா பனை மரங்களைக்  கைக்கொண்டு அணைத்து ஏறுவதைப் பார்க்க அவ்வளவு அழகா இருக்கும். (பனை ஏற்றத்தில் மரத்தை நெஞ்சனத்தி ஏறுவதும் ஒரு வகை) வட மாவட்டங்களில் இன்றும் இடைக்கயிறு போட்டுத்தான் பனைமரம் ஏறும் பழக்கம் இருக்கிறது. ஆனால் சுந்தரம் அண்ணா எந்தத்  துணையும் இல்லாமல் பனை மரத்தைத் தவளை தாவிக் குதிப்பதுபோல் தாவித் தாவி சில நொடிகளில் மேலே ஏறி, ஒரு மரத்தில் ஏறிவிட்டால் எதில் இருந்து கீழ் இறங்குவார் எனத் தெரியாது, அப்படித் தொடர்ச்சியாக ஒவ்வொரு பனையாக மரத்திற்கு மரம் தாவிச்  செல்வார்.


    அதிகாலையில் கிளம்பினால் மதிய சாப்பாட்டுக்கு மேல் தான் வீட்டிற்குத்  திரும்புவோம். பத்துப் பனை ஏறி இறங்கினால் சற்று ஆசுவாசபடுத்த மரத்தடியில் ஓய்வெடுப்பார். ஆனால் அந்த ஓய்வு நேரத்திலும் என்னிடம் பனை பற்றியே உரையாடுவார். அவருக்கு இந்தப் பனை என்னவெல்லாம் செய்தது, அவர் வாழ்வை பனை எப்படி எல்லாம் மாற்றியது என நிறைய சொல்வார். அவர் அளவுக்குப்  பனையை உணர்ந்தவர்கள், நேசித்தவர்கள் எங்கள் ஊரில் யாரும் இல்லை. எப்போதுப் பேசினாலும் அவர் சொல்லும் ஒரு வார்த்தை பனை தான் எங்க சாமி. எங்களை அதுதான் காப்பாத்தும், எங்களுக்கு எது தேவைனாலும் அது தான் கொடுக்கும்.


     பனை உணவுகளைப்  போல் வேறு எதையும் எங்கள் நாக்கு அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள்ளாது என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவர் சில நுங்குகளை வெட்டி என்னிடம் நீட்டினார், சிறிதுநேரம் கழித்துக்  கருப்பட்டித் துண்டு ஒன்றை உடைத்துக் கொடுத்தார். அவிழ்த்தப் பனங்கிழங்கை வெயிலில் காய வைத்து அதனை சிறு சிறு துண்டுகளாக்கிச் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு தேவைப்படும் போது வாயில் போட்டுக்கக்  கொடுப்பார். இப்படி அவருடன் இருந்தால் பசி என்ற உணர்வே வராமல் பார்த்துக் கொள்வார். அதோடு நில்லாமல் அவர் கொடுத்த நுங்கு, கருப்பட்டி, பனங்கிழங்கு பற்றிய பயன்களைச் சொல்லிக் கொடுப்பார். அவர் கூறுவதைக் கேட்டுத்  தலையை மட்டும் ஆட்டிக் கொண்டு அனைத்தையும் சாப்பிட்டுக் கொண்டிருப்பேன். அந்தச் சிறுவயதில் அவர் கூறும் எதையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.


     ஒவ்வொரு நாளும் அவர் தன் பனைப்  பணிக்குக் கிளம்பும் முன் இடுப்பில் சின்னச்  சின்னப் பனை வெல்லக்கட்டிகளை ஒரு துணியில் வைத்துக் கட்டிக்கொள்வார்,  வெயிலில் மரம் ஏறும்போது நாக்கு வறண்டு போகாமல் இருக்க. நான் அவர் வீட்டுக்குப்  போனால் என் கண்கள் முதலில் தேடுவது அவர் இடுப்பில் கட்டிருக்கும் அழுக்குப்படிந்த அந்தத்  துணியைத் தான். அவரும் நான் வந்தால் அதைத்தான் பார்ப்பேன் என்பதை உணர்ந்து, உடனே இரண்டுச் சிறியப்  பனங்கட்டியை உடைத்து ஒன்றை தூள் ஆக்கிக் குடிக்கும் தண்ணியில் போட்டு நன்றாக கலக்கி அதையே ஒரு பாட்டிலில் எடுத்துக்கொண்டு, மற்றொரு துண்டு கட்டியை எனக்குக்  கொடுப்பார்.

    சுந்தரம் அண்ணாவின் உடல் அமைப்பைப் பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். அவருடையத்  தோள்கள் கரும்பாறையைப் போல் நன்கு பெருத்துக் கடினமாக இருக்கும். 6 அடிக்கும் மேல் உயரம், ஆனால் அதிக எடையில்லை. ஆனால் கட்டான உடல் அமைப்பு, எனப்  பனையேறிகளுக்கே உரிய கம்பீரத் தோற்றத்தோடு இருப்பார். அவர் தோள் என்னைப் போன்று நான்கு சிறுவர்கள் உட்காரும் அளவுக்குப் படர்ந்து இருக்கும். பனை ஏற்றத்தின்போது உடம்பில் குத்தும் பனைச்  சில்லுகளாலும், மரத்தில் உராய்வதாலும் அவரின் மார்பு இறுகிப்போய் கடினமாக இருந்தது. சிறுவயதில் இருந்து மரம் ஏறுவதால் அவரது கால் கட்டைவிரல் சற்று வீங்கி வளைந்து போய் இருக்கும். ஒரு முறை பனை ஏற்றத்தின் போது, செங்குளவிக்  கொட்டியதால் தவறி கீழே விழுந்து அவர் முழங்கை மற்றும் இடதுகால் முட்டியில் நீண்டநாள் காயத்தை உண்டாக்கிவிட்டது. ஆனால், எத்தனையோத் துயர்களைக் கொடுத்தாலும் பனை மீதான அவரின் காதலுக்கு எந்தக் குறையும் இல்லை. அவரின் குரலுக்கு ஊரில் பயப்படாதச்  சிறுவர்கள் இல்லை.


    பல வீடுகளில்  குழந்தைகள் சாப்பிட மறுத்தால் சுந்தரம் அண்ணா வந்துடுவாங்க,  புடிச்சிப்பாங்க எனப் பயத்தைச் சொல்லிக் குழந்தைகளைச் சாப்பிட வைக்கும் அளவிற்கு அவரின் சத்தம் எல்லாரையும் பயம் கொள்ளச்  செய்துவிடும். ஆனால், ஏனோ நான் மட்டும் எந்தப் பயமுமின்றித் தாய் பூனையைச் சுற்றி அலையும் குட்டிப் பூனை போல் அவருடனேச் சுற்றி அலைந்தேன். அவருக்கும் அந்த அன்பு நிறைந்த அரவணைப்புத்  தேவையாய் இருந்தது.


   சுந்தரம் அண்ணாவுடனும், அந்த நெடும் பனைகளுடனும் எனக்கு ஏன் இவ்வளவு நெருக்கம் என பல நேரம் யோசித்திருக்கிறேன். ஒருநாள் அதை என் பாட்டியிடமே கேட்டேன். அப்போது தான் எனக்கு அவள் சுந்தரம் அண்ணாவின் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.  "கண்ணு, இரண்டு தலைமுறைக்கு முன்னாடி உன்னோட பாட்டனார் சுக்கரமணி கள்ளுக்கடை நடத்திட்டு வந்தாங்க. அப்ப ஊர்ல பனையேறும் ஆள்காரங்க இல்லாததால செய்யார், சொறையூர் பக்கம் தன் நண்பரோட பண்ணையில் வேலை பார்த்த இரண்டு பனையேறும் குடும்பத்தை இங்க கூட்டிட்டு வந்து குடிவச்சாங்க. அவங்க வாரிசுங்க தான் இப்ப வரைக்கும் நம்ம ஊருல பனைமரம் ஏறிட்டு இருக்காங்க. சுந்தரம் தான் அந்தக்  குடும்பத்தோட இப்ப இருக்குற தலைமுறை. அதனால தான் சுந்தரம் நமக்கு இவ்வளவு நெருக்கமா இருக்கான்னு பாட்டி சொல்லி முடித்தார்".


       ஆனால் சுந்தரம் அண்ணாவுடன் நெருக்கம் ஏற்பட இன்னொரு காரணம் அவரின் ஒரே மகள் பூங்கொடி. நாங்கள் நெருங்கிய நண்பர்கள். பள்ளியில் மற்ற பெண்களைப் போல் இல்லாமல் என்னுடன் சகஜமாகப்  பழகக்கூடியவள். எதைப் பற்றியும் பெரிதாக அலட்டிக் கொள்ளமாட்டாள். படிப்பில் கெட்டிக்காரி எனப் பெயர் எடுத்தவள். நான் படிப்பில் மக்கு என்பதால் பல நாட்கள் அவளின் பெயர் சொல்லி எனக்கு வீட்டிலும், பள்ளியிலும் அடி விழும். ஆனால் ஒருநாளும் தான் மெத்தப்  படிப்பாளி என்ற கர்வம் துளியும் அவளிடம் இருந்தில்லை. எனக்குப் படிப்பில் நிறைய உதவிகள் செய்வாள். உணவு இடைவேளையின் போதும், ஓய்வு நேரங்களிலும் அவள் அதிகம் பேசுவதுப் பனைப்பற்றியும், அவள் அப்பா பற்றியும் மட்டும் தான். மூன்று வயதாக இருக்கும் போதுத் தன் அம்மாவை இழந்தவள். இன்று வரை அவள் அப்பா தான் அவளுக்கு அம்மாவுமாக இருந்து பார்த்துக்கொள்கிறார். எனக்கு அவளைப்  பார்க்காமல், அவளிடம் பேசாமல் அன்றைய நாள் கடந்து போகாது. அவளுக்கும் என் மீது தனித்த பாசம், சுந்தரம் அண்ணாவும் அதீத அன்போடு இருப்பார்.


    பனை ஆசான் உடனே வாழ்வதால் பூங்கொடிக்குப் பனை குறித்து நிறைய நுட்பமான வேலைகள் தெரிந்து இருந்தது. முக்கியமாகப்  பனையேறி மகள்களுக்கே உரிய கலை அழகுடன் பனை ஓலைகளில் விதவிதமானப் பொம்மைகள், ஓலைப் பெட்டிகள் செய்துக் கொடுப்பாள். எனக்கு நுங்கு வண்டி கற்றுக் கொடுத்ததும் அவளே. ஒவ்வொரு ஆண்டும் நுங்குப்பருவம் வந்தால் முதல் வேலையாக நானும், பூங்கொடியும் சுந்தரம் அண்ணாவைக்  கூட்டிக்கொண்டு ஏரிக்கரைக்குச் சென்று நுங்கு வெட்டிப்போடச் சொல்லித் தொந்தரவு செய்து இருவரும் போட்டி போட்டுக் கொண்டு சாப்பிடுவோம். நுங்கைச் சாப்பிட்டேச் சில நேரம் எங்கள் கை விரல்கள் வீங்கிப் போனதும் உண்டு.


   கோடை விடுமுறை முடிந்தபின் ஓர் அதிகாலை நேரத்தில் பூங்கொடியைப் பார்க்க அவள் வீட்டிற்குச்  சென்றிருந்தேன். அன்றும் நான் வருவதற்கு முன்பே சுந்தரம் அண்ணா கிளம்பி இருந்தார். ஆனால் பூங்கொடியோ சுற்றி நடக்கும் எதையும் பொருட்படுத்தாமல் வித்தியாசமான ஒரு பழத்தை ருசித்துக் கொண்டிருந்தாள். நான் வந்து நெடு நேரமாகியும் என்னைப்  பார்க்காமல் அந்தப் பழத்தை ருசிப்பதிலேயே மூழ்கி இருந்தாள். ஒரு வழியாக அவள் தலை நிமிர்ந்தது. மகிழ்ச்சி நிறைந்த கண்களோடு என்னைப் பார்த்தாள். அவளின் முகம் முழுக்க அந்த பழத்தின் நார்கள் ஒட்டிக்கொண்டும், வாயில் இருந்து மஞ்சளாக எச்சில் வழிந்துகொண்டும் இருந்தது. தனது இடதுகையால் அதைத்  துடைத்துக் கொண்டு மறுமொழி ஏதும் பேசாமல் அதேப்போன்று எனக்கும் ஒரு பழம் கொடுத்துச் சாப்பிடு என்று கண்ணால் சாடைக் காட்டினாள்.


      அதுவரை அப்படி ஒரு பழத்தை நான் கண்டதில்லை, அதன் மேல் தோல் கருப்பாகவும், உள்ளுக்குள் மஞ்சளானச்  சதை நார் நாராகவும், பிசுபிசுப்புடனும், ஈக்கள் மொய்த்துக் கொண்டும் இருந்தது. அதைக் கையில் வாங்கவே எனக்குத் தயக்கமாக இருந்தது. ஆனால் அதன் வாசனை மூக்கைத்  துளைத்துக் கொண்டும், வாயில் எச்சில் ஊறிக் கொண்டும் இருந்தது. என் நினைவில் இதுவரை இது போன்றதொரு பழத்தை நான் சாப்பிட்டது இல்லை, ஆனால் அதன் தோற்றம் எங்கோ பார்த்த நினைவாகவே இருந்தது. அப்போது மழை காலம் என்பதால் ஏரிக்கரையில் இருந்தப்  பனைச்சாலை முழுக்க இந்தப் பழத்தின் வாசனை தான். அந்த வாசனை காற்றின் ஊடாக பயணித்து ஊரின் பாதித் தெருக்கள் வரை வந்து கொண்டுஇருந்தது.


    ஆம். அதுதான் "கற்பகத்தருவின் கருமுட்டையானப்  பனம்பழம்" என கம்பீரமானக் குரலில் சொல்லிக்கொண்டேப்  பனை மரத்திலிருந்து இறங்கி வந்தார் சுந்தரம் அண்ணா.


   இந்தப்  பழத்தைப் பற்றி என் பாட்டி ஒரு முறை பேசிட்டு இருக்கும்போது, காக்கா உட்காரப் பனம் விழுந்ததாம் என்ற பழமொழியோடுக் கதை சொல்லிக்கேட்டு இருக்கேன். அதன் பிறகு பெரிதாக இந்த பழத்தைப் பற்றி அறிந்தது இல்லை, அப்போதையப்  பழக்கடைகளில் கூட, (இப்போதும்) இந்தப் பழத்தை நாம் பார்த்திட முடியாது, டிவியிலும் கூட நம் மண்ணுக்குக் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாதத் தூர தேசத்துப் பழங்களைப் பற்றி மட்டுமே விளம்பரங்கள் இருக்குமேத் தவிர, நம் பனம்பழங்கள் பற்றி எந்த தகவலும் எங்கள் காதுகளையோ, கரங்களையோ வந்தடையவில்லை.


   அப்போது தான் தெரிந்தது. பனை மரத்தை வளர்க்க பனம்பழத்தின் விதையைத் தான் மண்ணில் ஊன்றவேண்டும் என்று.  இதை எப்படி சாப்பிடுவது என்று சுந்தரம் அண்ணாவிடம் கேட்டுக்கொன்டிருக்கும் போதேக் காய்ந்த நான்கு, ஐந்து பனை ஓலைகளை மட்டையோடுக்  கொண்டு வந்து தீமூட்டி பனம்பழத்தை எடுத்து நெருப்பில் காட்டிக் கொண்டிருந்தார். எனக்கு எதுவும் புரியவில்லை. எதற்காக நெருப்பில் காட்டவேண்டும். அண்ணாவும் பதில் எதுவும் சொல்லாமல் பழத்தை முழுதும் நெருப்பில் காட்டிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் பழம் முழுவதும் வெடிப்புற்றுக்  கருகிப் போனது. பின் அதை எடுத்து மேல் இருந்தக் கருப்பு தோலை மட்டும் உரித்து உள்ளிருந்த மஞ்ச நிற நார் பகுதியின் மீது ஏற்கனவே இலகுவானப் பாகாக மாற்றி வைத்திருந்தக் கருப்பட்டிச் சாற்றை எடுத்து ஊற்றினார், அது அந்தப் பழம் முழுவதும் நிரம்பியது. எல்லாவற்றையும் வேடிக்கைப் பாத்துக்கொண்டிருந்த என்னை இங்கவாடான்னு கூப்பிட நான் பூங்கொடி அருகில் போய் நின்றேன்.


     இந்தா தம்பி இத வாயில கடிச்சிச்  சாறு முழுங்கு என்று பழத்தைப் பிரித்து எனக்கும், பூங்கொடிக்கும் கொடுத்துவிட்டு அவரும் வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தார். நான் வாய்க்குக்  கொண்டு போகும்முன் ம்ம்ம்ம்ம்ம் என்று சாறு உறிஞ்சும் சத்தம் கேட்டது பூங்கொடியிடமிருந்து. அதற்கு மேல் என்னாலும் பொறுமையாக இருக்க முடியாமல் வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தேன். சுட்டப்  பனம்பழ மனத்தோடுக் கருப்பட்டிச் சாரும் கலந்த சுவையை என் நாக்கின் சுவை அரும்புகள் முதல் முறையாக உணர்ந்தது. பிறகு நான் மட்டும் தனியாக முழு பழத்தையும் சாப்பிட்டு முடித்துவிட்டேன். முதல் முறையாக எனது முகமும் பனம்பழ நார்களால் நிரம்பியது.


   பனை மரங்கள் பரவலாக இருந்தும், அது சார்ந்த தொழில்கள் பெரிதாக இல்லாத எங்கள் பகுதிகளில் கிடைக்கும் பனைஉணவு நுங்கும், கள்ளும் மட்டும்தான் என்ற என் நினைப்பு பனம்பழத்தின் சாறு நாக்கைக் கடந்துச்  செல்கையில் தவிடாகிப் போனது. அந்தப் பருவம் முழுவதும் பூங்கொடியோடுச் சேர்ந்துப் போட்டி போட்டுக்கொண்டு பனம் பழங்களை நெருப்பில் சுட்டோ, பழமாகவோ தின்னுத் தீர்த்தேன்.


  காலங்கள் ஓடியது பூங்கொடிக்குத்  திருமணம் ஆகி வெளியூருக்குச் சென்றுவிட்டாள். நானும் வேலைக்காக வெளியூருக்கு வந்துவிட்டேன்.


    ஆனால், ஒவ்வொரு ஆண்டும் குலதெய்வ படையலுக்காக ஊருக்கு வரும் போதெல்லாம் நானும் பூங்கொடியும் சந்தித்துக் கொள்வோம், அது வெறும் சம்பிரதாயச்  சந்திப்பாக மட்டும் இல்லை. பள்ளிப் பருவத்தில் அவளிடம் இருந்த அதே கருணை நிறைந்த வார்த்தைகள் தான் இப்போதும் வந்தது. ஊருக்கு வந்ததும் என் கண்கள் பார்க்கத் துடிப்பது சுந்தரம் அண்ணாவின் வருகையைத்  தான். ஆனால் இப்போது அந்தப் பருத்தத் தேகம் முதுமையின் பிடியில் சிக்கி இருந்தது, மூச்சுக் காற்றின் சத்தம் கூட அருகில் இருப்பவர்களுக்குக் கேட்கும் அளவுக்கு முதுமை அவரைத் தள்ளியது. ஆனாலும் கூர் தீட்டப்பட்டத்  தன் பாளை அரிவாளை இடுப்பில் கட்டிக் கொண்டு, நடுங்கும் தன் கால்களைப் பனையில் ஊன்றி மேல் ஏறிப் பாளையைச் சீவி விட்டு, பதனீர்ப் பானையைக் கட்டுகிறார். முதுமையின் இறுக்கம் கூடப் பனை மீதான அவரின் காதலை எதுவும் செய்ய முடியவில்லை.

   
இந்தாண்டு ஊருக்கு வந்த நேரம் சரியாகப்  பனம்பழ பருவம், ஆடிக் காற்றில் ஊரெங்கும் பனம்பழத்தின் வாசம்  மொய்த்துக் கொண்டிருந்தது. சிறுவயதில் கேட்டது போன்றே நானும் பூங்கொடியும் பனம்பழத்தைச்  சுட்டுக்கொடுக்கச் சொல்லி அண்ணாவிடம் கேட்டோம். நானோ, பூங்கொடியோ வெளியூர்களுக்குச் சென்றபிறகுச் சில ஆயிரம் ரூபாய் செலவு செய்து உயர்தரப்  பழங்களை வாங்கிச் சாப்பிட்டுள்ளோம். ஆனால் இன்றளவும் சுட்டப் பனம் பழத்தின் சுவைக்கு உலகின் எந்த மூலையில் உள்ள பழமும் ஈடாக முடியவில்லை.


    நாங்கள் பல வருசம் கழித்துக் கேட்டதால் அண்ணாவிற்கு ரொம்ப சந்தோசம். பனம் பழங்களைச் சேகரித்துக்  கொண்டு இருக்கும் போது சில மரங்களில் நுங்கு இருப்பதைப் பார்த்துட்டு இருந்தேன், நான் பார்ப்பதை அவரும் பார்த்தார் பின் வேக வேகமாக கல்யாண முருங்கை மரத்தின் கட்டைமீது சிறிது மணலைப் பரப்பி அதில் பாளை அரிவாளைக்  கூர்தீட்டி விட்டு, இடுப்பில் இடை கயிற்றை மாட்டிக் கொண்டு, பொறுகையாக மரத்தின் உச்சிக்குச் சென்றுச் சரசரவென நுங்குக் கொலைகளைத் தள்ளிவிட்டார். உச்சியில் அவரின் கால் நடுக்கம் என்னால் தரையில் இருந்து கொண்டே உணர முடிந்தது, சிறுவயதில் ஒரு மரத்தில் இருந்து இன்னொரு மரத்திற்குத்  தாவி செல்லும் சுந்தரம் அண்ணா சில கணம் நினைவுக்கு வந்தார்.


     பல ஆண்டுகள் கழித்து மீண்டும் எங்கள் நாக்கிற்குக்  பனம்பழத்தின் அருமையை உணரச் செய்தார். அன்றைய இரவு மூவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பூங்கொடியின் குழந்தை அழுததால் அதற்குப் பால் கொடுக்கச்  சென்றுவிட்டாள். முன்னிரவு நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஒரு சில நாட்கள் கழித்து நாங்கள் மீண்டும் ஊருக்குத் திரும்ப வேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, முதல் முறையாக பருத்தத் தேகம் கொண்ட அந்த உருவத்தின் கண்களில் கண்ணீர் வடிந்ததைப் பார்த்தேன்.


  கசியும் நீர்த்துளிகளைத்  தோளில் இருந்த அழுக்கு துண்டில் துடைத்துக் கொண்டு பேசத் தொடங்கினார்.  தம்பி வாழ்க்கை முன்ன மாதிரி இல்லப்பா, சுயநலமா இருக்குற இந்த சனங்க மத்தியில வாழ்றதே கடும் போராட்டமா இருக்கு. சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமப் பல நாட்களைக்  கடந்து வந்துட்டேன், பூங்கொடி பிறக்கும்போது இந்த ஊருல எங்க ஆளுங்க இருபது குடும்பம் இருந்துச்சி. ஆனா இன்னிக்கி நான் ஒத்த ஆள் மட்டும் தான் இருக்கேன். எனக்கு அவங்களை மாதிரி இந்தப்  பனைகளை அனாதையா விட்டுட்டுப் போக மனசு இல்ல. உனக்குத் தெரியும்ல என்னோட இளமை காலத்துல நான் ஒரு நாளைக்கு அம்பது மரம் ஏறி இறங்குவேன். ஆனா இப்ப என்னோட உடம்புக்கு ஓய்வு தேவை என உணர்கிறேன். இந்த மண் வெகு விரைவில் என்னை உள் அழைத்துக் கொள்ளும், ஆனா…


     எனக்கு இருக்கும் ஒரே கவலை, நான் இல்லாது போனால் என்னுடையப்  பனை பிள்ளைகள் என்ன ஆவாங்க..! எப்படி இருப்பாங்க..! அவைகளை யாரு கவனிச்சிப்பாங்க..! நான் நேசித்ததுபோல், நான் அணைத்துக் கொண்டதுபோல் இந்த மரங்களை யார் பார்த்துக்குவாங்க.. இந்த கவலையாலதான் என் உசிர கையில் புடிச்சி வச்சிட்டு இருக்கேன்னு சொல்லிக்கொண்டேத்  தன் அருகில் இருந்தப் பனை மீது கை வைத்து குட்டி கன்றைத் தடவிக் கொடுப்பதைப் போல் தடவிக் கொடுத்தார். பின் மீண்டும் அவர் கண்கள் நீர் நிறைத்துக் கொண்டிருந்தது. அந்த இடம் விட்டு நகர மனமில்லாமல் கனத்த இதயத்துடன் என் வீடு வந்து சேர்ந்தேன்.


       இரவு வெகு நேரம் ஆன போதும் தூக்கம் இல்லை. இப்படி ஒரு கடின இரவை நான் இதுவரை உணர்ந்தது இல்லை. எந்தப் பக்கம் படுத்தாலும் சுந்தரம் அண்ணாவின்  வார்த்தைகள் தான் திரும்பத் திரும்பக் காதுகளில் கேட்டுக் கொண்டே இருந்தது.

       நாம் எடுக்கும் சில முடிவுகளால் நம் ஒட்டு மொத்த வாழ்கையே நொடிகளில் மாற்றிவிடுகிறது. அப்படி ஒரு தீர்க்கமான முன் முடிவோடு தான் அன்றிரவு தூங்கினேன். என்னுடைய இந்த முடிவு சுந்தரம் அண்ணாவிற்குச்  சந்தோசத்தைக் கொடுத்தாலும் அவர் நிச்சயம் இதை ஏற்கமாட்டார். எதுவாயினும் அவரிடம் இது குறித்துப் பேசியாக வேண்டும் என மறுநாள் காலையில் சீக்கிரம் எழுந்து வேக வேகமாக அண்ணா வீட்டிற்கு சென்றேன். அப்பா விடியற்காலையிலேயே ஏரிக்கரைக்குப்  போய்ட்டாரு என்று பூங்கொடி சொல்லிக் கொண்டிருக்கும் போதே என் கால்கள் வேகமாக ஏரிக்கரை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.

       அண்ணா மரம் ஏறாமல் அதன் அடியில் அமைதியாக உட்கார்ந்துகொண்டுக்  காற்றின் இசைக்கேற்ப ஆடும் பனைகளின் அசைவுகளைக் கவனித்துக் கொண்டு இருந்தார். நான் தூரத்தில் வேகமாக வருவதைப் பார்த்து அவரும் எழுந்து நின்றார். அவரிடம் வந்த பிறகு இருவரும் சில நிமிடங்கள் பேசிக் கொள்ளாமல் இருந்தோம். ஆனால் எங்கள் கண்கள் அவ்வாறாக இல்லை. என்னவென்று வாய் திறக்காமல் புருவத்தை மட்டும் உயர்த்திக்  கேள்வியை முன்வைத்தார். அவரின் முகம் வாடி இருந்தது. அவரின் மனம் ஏதோ ஒன்றால் சலனமுற்று இருந்தது. நடப்பதை என்னால் புரிந்துக் கொள்ள முடியாமல் இல்லை. நான் சொல்ல நினைப்பதைச் சொல்ல தடுமாறுகிறேன். அவர் திரும்பி மீண்டும் பனைகளையேப் பார்த்துக்கொண்டிருந்தார்.


       அண்ணா, நான் இனி ஊருக்குப்  போகமாட்டேன் உங்கக் கூடவே இருந்துப்  பனைகளைப் பார்த்துக்குறேன் என்று சொன்னதும் வேகமாக என் பக்கம் திரும்பி, என்ன தம்பி சொல்ற, விளையாட்டுக்குச்  சொல்லுரயா, இதெல்லாம் வேணாம் பா, நீ பட்டணத்துக்குப் போய்ட்டு உன் பொழப்பப் பாரு, உங்க வீட்டுல உள்ளவங்களுக்குத்  தெரிஞ்சா அப்புறம் பெரியப் பிரச்சனையாகிடும். நான் இருக்குற வரை பனைகளைப் பாத்துக்குறேன்யா, நீ போ என விடாமல் பேசினார்.


      நான் கணித்தது போல் தான் அவரும் பேசினார். ஆனால் அவர் அரைமனதோடு தான் சொல்கிறார் என்பதை நான் புரிந்துக்கொண்டேன். ஏனெனில் நான் பனைகளைப்  பார்த்துக்கொள்கிறேன் என்று நான் சொன்னதும் அவர் முகத்தில் அப்படி ஒரு பிரகாச ஒளி வந்து போனது. பிறகு எங்க வீட்டில் சம்மதித்தால் சரி என்று சொல்லி அனுப்பினார். வீட்டில் யாரும் இதை  ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. எல்லாரும் அதற்கு எதிராகத் தான் நின்றார்கள், பேசினார்கள். என்னால் சுந்தரம் அண்ணாவுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியுமா என்ற சந்தேகத்தோடு அவரிடம் சொல்லிக் கொள்ளாமல் ஊருக்குத்  திரும்பினேன்.


          காலம் நமக்காகக்  காத்திருப்பதில்லையே. நான் பயந்தது போலவே சில மாதங்களில் அந்தச்  செய்தி வந்தது.


       காலன் அவரை அழைத்துக் கொண்டான். அவரும் தன் பனைக்  குழந்தைகளுக்கான உயிர் போராட்டத்தில் இருந்து அவரை விடுவித்துக் கொண்டார். பசிக்காக அழும் குழந்தையைத்  தூக்கிச் சுமக்கும் தாயாக அவர் இருந்தார். வாழ்வின் கால ஓட்டங்களைச் சரியாக வழிகாட்டும் அப்பாவாக, ஆசானாக அவர் இருந்தார். எனக்காக எல்லாம் செய்யும் என் உயிர் நட்பாகவும் இருந்தார். எல்லாமாகவும் இருந்த அவர் இன்று இல்லாமல் போகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.


        அவருக்கு நான் கொடுத்தச் சத்தியத்தைக்  காப்பாற்ற முடியாமல் போனதை எண்ணி எண்ணி என் தூக்கம் தொலைந்து கொண்டிருந்தது. ஊருக்கு வந்து இறங்கும்போது என் கால்கள் மட்டுமே நடந்து கொண்டிருந்தது.. நானோ நடை பிணமாக... அதீதக்  குற்ற உணர்ச்சியின் உச்சித்தில் என் மனம் நிலைக்கொண்டிருந்தது.


     பூங்கொடியிடம் என்னால் இயல்பாகப்  பேச முடியவில்லை, என்னையே நான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டேன். ஏன் இவ்வளவு சுயநலமாய் இருக்கிறோம் என்று.


         ஒரு மனிதன் தன் உயிரையே இந்த மரங்களுக்காகப் பிடித்து வைத்திருந்தான் என்பது அவ்வளவு எளிதில் கடந்துச்  செல்லும் விசயமாக இல்லை. அதற்கு ஆகப்பெரும் அர்ப்பணிப்பும், அன்பும், கருணையும், உண்மையானப் பிராத்தனையும் தேவைப்படுகிறது. அனைத்தையும் அவர் தன் பனைக்  குழந்தைகளுக்காகச் செய்தார். விதையில் இருந்து வளர்த்தத் தன் பனைகளின் அடியிலேயே விதையாய் விழுந்துப் போனார் அந்த மாமனிதர்.


         சில மாதங்களிலேயே நான் உணர்ந்துகொண்டேன்,  பனையேற்றம் என்பது வலிநிறைந்தக் காதல் என்பதை. ஆம். சுந்தரம் அண்ணாவின் இறுதிச்  சடங்குகள் முடித்துவிட்டு நான் ஊருக்குத் திரும்பவில்லை. ஆண்டுகள் பல கடந்து அவரின் பாதங்களைத்  தாங்கிய பனைகள் இன்று என் கால்களுடன் பயணிக்கத் தொடங்கியுள்ளன. அண்ணாவின் ஆசைப்படி அவர் உயிராய் வளர்த்தப்  பனைகளை பார்த்துக் கொள்ளவும் என் வாழ்வின் மீதிப் பொழுதுகளைக் கழித்திடவும் நான் ஊரிலேயே இருந்துவிட்டேன்.


        பனையேற்றம் என்பது பொறுமையும் வலிமையும், சகிப்புத்  தன்மையும் அடங்கிய ஓர் மகத்தானக் காதல். அவ்வளவு எளிதில் எனக்குக்  கிடைத்துவிடவில்லை. தொடர்ச்சியான அணைத்தலுக்குப் பிறகும், பனை மீதான உண்மையான நேசத்திற்குப் பிறகும் பனையேற்றத்திற்கு என் கால்கள் பழகியது. பனையின் உச்சிக்குச்  சென்று குரும்பை, பாளைகளைச் சீவிவிட்டு முதல் முறையாகக் கலையம் (பதனீர் பானை) கட்டினேன். உடல் சிலிர்க்கும் அந்நிகழ்வைப் பார்க்க இன்று அவர் இல்லை.


       அண்ணா இருக்கும்போது நிறைய முறை பனை ஏற சொல்லித் தரும்படிக்  கேட்டிருக்கிறேன். ஆனால் எங்கள் வீட்டு ஆட்களுக்குப் பயந்து எனக்கு சொல்லிக் கொடுக்க மறுத்துவிடுவார்.  எனக்குத் தலைக்கயிறு, இடைக்கயிறு மாட்டிவிட்டு ஏணி போட்டுப் பனை ஏற்றத்திற்கு உதவிசெய்ய இன்று அவர் இல்லை, ஆனாலும் இவை அனைத்தும் அவருடன் பழகிய நாட்களில் கிடைத்த அனுபவங்களின் நினைவுகளில் இருந்தே நான் முன்னேடுத்தேன்.


     பனை மரத்தில் நான் கட்டிவைத்தக் கலையம் நிரம்பியது, ஒரு துளியும் சிந்திடாமல் கலையத்தோடுச் சுந்தரம் அண்ணா விதைக்கப்பட்ட இடத்திற்குச் சென்றேன். பல மாதம் கழித்து அங்குச் செல்கிறேன். அவருடன் விதைத்த இரண்டுப்  பனை விதைகள் நன்குத் துளிர்விட்டு இரண்டு சிறு ஓலைகளை வெளிக்காட்டிக் கொண்டு இருந்தன, கொண்டு வந்தக் கலையத்தில் இருந்தப் பனம்பாலை அவருக்குப் படையலிட்டு, பின் அந்தப் பனைக் குழந்தைகளுக்கு மொத்தமாக ஊற்றினேன்.


      பனை ஏற்றத்தில் துளியும் அறிமுகம் இல்லாமல்  நான் செய்துகொடுத்தச் சத்தியத்தால் இன்று பனை ஏற கற்றுக்கொண்டேன். பனை ஏற்றத்தின் ஊடாக அண்ணா வளர்த்தெடுத்தப் பனைக்  குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளேன். எம் வாழ்வில் ஆகச்சிறந்த மனநிறைவாக இந்தப் பனையேற்றம் இருக்கிறது.


    வாழ்வின் நாட்கள் வேகமாக ஓடிவிட்டது. ஆண்டுகள் பல கடந்துவிட்டன. இன்று நான் மட்டுமல்ல, எங்கள் ஊரில் பத்து, பதினைந்து பசங்களுக்குப் பனை ஏறக் கற்றுக்கொடுத்து அவர்களும் ஆண்டு தோறும் கலயம் கட்டிப்  பதனீர் இறக்குகின்றனர். மண்ணில் விதையாய் உறங்கிக் கொண்டிருக்கும் எம் பனை ஆசான் சுந்தரம் அண்ணாவின் பிராத்தனையே இந்தப் பனைகளை இன்றும் உயிர்ப்போடு காத்துக் கொண்டிருக்கிறது.


      அந்த ஏரிக்கரைப்  பனைச் சாலையில் உள்ள ஏதோ ஒரு மரத்தில் அவர் உறைந்து கொண்டு எங்களுடனே வாழ்ந்து வருகிறார்.


அன்பும் நன்றியும்
பனை சதிஷ்

22.08.20

Comments

  1. அருமையான பதிவு

    ReplyDelete
  2. அருமையாக உள்ளது சகோ.. பனையேறும் பயிற்சி பட்டறை தாங்கள் நடத்தலாமே

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ, நிச்சயம் அதற்கான முன்னேடுப்பினை எடுக்கலாம்.

      Delete
  3. Very elegantly conveyed the story, simple language made it interesting. You brought the entire story lively. Really appreciate your efforts,I enjoyed this story, please continue writing expecting more such quality fresh stories.

    ReplyDelete
  4. Superb .....not able to hold my tears....

    ReplyDelete
  5. அருமையா இருந்தது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்