பருவநிலை மாற்றமும் - பனையின் தேவையும்

      நான் பள்ளியில் படிக்கையில் மழை குறித்து எங்கள் ஆசிரியர் கூறும் போது எனக்கு அறிமுகமான வார்த்தை தான் பருவமழை, நான் கல்லூரிக்கு செல்கையில் அந்த வார்த்தை பருவமழையில் இருந்து பருவம் பொய்த்த மழை என்றானது, அதுவே கல்லூரி முடித்து வேலைக்கு செல்கையில் அது பருவநிலை மாற்றம் என்றானது, இன்றோ அது அதிதீவிர பருவநிலை மாற்றமாக உருவெடுத்து நிற்கிறது.

   மேற்கூறிய சொற்களை வெறும் வார்த்தை பரிமாற்றமாக நாம் பார்க்க முடியாது,  கடந்த 4 கோடி ஆண்டுகளாக பாதுகாப்பாக இருந்த இந்த பூமியின் இயற்கை வளங்களை, மனித இனமானது 400 ஆண்டுகளில் அதனை பாதியாக குறைத்தது தான் அதன் பெரும் சாதனை, வரலாற்று பிழைகளில் இருந்து மனித இனம் பாடம் கற்றுக்கொள்ள மறுக்கிறது, அது மேலும் மேலும் அழிவு சக்திகளையே ஊக்குவிக்கிறது. அனைத்தையும் பணமாக பார்த்த மனிதனின் கொடுஞ்செயல் இப்பூவுலகின் உயிர் ஆதாரமான மலைகளையும், மழைக்காடுகளையும், ஆற்றையும், கடற்பரப்பையும், இயற்கை சமநிலையையும் கெடுத்தது தான். இன்றளவும் உலகம் முழுமைக்கும் நடக்கும் சூழலியல் பாதுகாப்பு குறித்த கருத்தாக்கங்கள் பூட்டிய அறைக்குள்ளேயே நடந்து வருகிறது, அது களத்திற்கு வரவேண்டும் நாம் இயற்கையை பாதுகாக்க அறைகூரல் விடுக்க வில்லை, இயற்கையை தன் போக்கில் விடுங்கள் தன்னை தகவமைத்து கொள்ளும் ஆற்றல் அதற்கு மட்டுமே உண்டு.


பருவநிலை மாற்றத்தால் நாம் சந்திக்க போகும் விளைவுகள்:-

சமிபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது, இந்தியாவில் உள்ள இயற்கை வளங்களை நாம் இதே வேகத்தில் சுரண்டிக் கொண்டிருந்தால் 2050க்குள் அனைத்து இயற்கை வளங்களும் தீர்ந்து போகும் என்று, அனைத்து வளங்கள் இருந்தும் நாம் சந்தித்து கொண்டிருக்கும் பேரழிவுகள் நாளுக்கு அதிகமாக கொண்டே இருக்கும் வேலையில், இயற்கை வளங்களை முற்றிலும் அழிந்து போனால் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்டுத்தும் என்பதை உங்கள் கற்பனை அறிவுக்கு விடுகிறேன், நாம் இப்போதே விழித்துக் கொள்ள வேண்டும் என்பது தான் இயற்கை ஒவ்வொரு நிகழ்விலும் நமக்கு உணர்த்தும் பாடம், இல்லையேல் நம் வாழும் தலைமுறையிலேயே நாம் அனைத்தையும் இழந்து நிர்க்கதியாய் நிற்க வேண்டி இருக்கும்.

இந்திய கடற்கரைகளின் அழிவு:-

இந்தியாவில் உள்ள கடற்கரைகளில் மேற்கொள்ளப்பட்ட வரம்பற்ற கட்டுமானங்களாலும், தேவையற்ற துறைமுகங்களாலும் கடற்கரை மணல் தன் பிடியை இழந்துள்ளது, இந்த கட்டுமானங்கள் கடலின் உப்புநீர் நிலத்தடி நன்னீருடன் கலக்காமல் பாதுகாத்த கடற்கரை மணல் மேடுகளை காணாமல் ஆக்கிவிட்டது. அதன் விளைவாக நெய்தல் பகுதியின் ஓரங்களில் மட்டுமே இருந்த கடலின் உவர்ப்பு நீர் இப்போது படிப்படியாக அடுத்த அடுத்த சமவெளி பகுதிகளுக்கும் கடத்தப்படுகிறது, நிலத்தடி நீர் உவர்ப்பாக மாறுவதால் மக்களின் அன்றாட வாழ்வாதாரமும், விவசாயமும் பெரிதும் பாதிக்கப்படுகிறது, இவற்றால் மக்களின் பொருளாதாரமும் பெரிய அளவில் பாதிப்படைகிறது.

 தீபகற்ப இந்தியாவில் வாழும் மக்களுக்கு அம்மாவை விட உண்ணதமான ஒரு சொல் உள்ளதெனில் அது மேற்கு தொடர்ச்சி மலை தான், உலகின் பாதுகாக்கப்படும் இயற்கையின் பேரதிசியமான இம் மலைகளில் தான் கருமேகங்களை அறுவடை செய்யும் புல்வெளிக்காடும், சோலைகாடும் உள்ளது. ஆனால் பன்னாட்டு வியாபார மோகம் இந்த இயற்கை அதிசயத்தை அழித்து அதன் மேல் தேயிலையும், அந்த நிலப்பகுதிக்கு சற்றும் தொடர்பற்ற வணிக  தாவரங்களையும் உற்பத்தி செய்கிறது. இதன் விளைவை ஐயா நம்மாழ்வார் இவ்வாறு குறிப்பிடுகிறார், தமிழ்நாட்டில் கடந்த 20, 30 ஆண்டுகளாக பருவ மழையே இல்லை பேய் மழை தான் பெய்கிறது, மூன்று மாதம் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்து விடுகிறது, அப்படி பெய்யும் போது மேல் மண் முழுவதையும் பெயர்த்து எடுத்துக்கொண்டு போய்விடுகிறது, ஏற்கனவே நாம் மழை காடுகளை அழித்து விட்டதால் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட தொடர் நிலச்சரிவு செய்திகளின் மூலம் நாம் உணர்ந்து கொள்ளலாம், எனவே நாம் சமூகநல காடுகளை விரைவாக மேம்படுத்த வேண்டும் என்கிறார், சூழலியல் எழுத்தாளர் தோழர் நக்கீரன் மரங்களை இந்த வணிக உலகம் எவ்விதம் காண்கிறது என்பதை பற்றி தன் காடோடி புத்தகத்தில் இவ்வாறு கூறுகிறார் மரம் என்றால் அது இலைகள் அல்ல, பூக்கள் அல்ல, காய்கள் அல்ல, கனிகளும் அல்ல, ஏன் அது மரமே அல்ல, மரம் என்றால் அது வெறும் டாலர் டாலர் டாலர் மட்டுமே.

பனை எனும் சூழலியலாளன்:-

பனை மரம் பொதுவாக நெய்தல் நிலத்திற்கே உரிய மரம் என்றாலும் தமிழக மெங்கும் பல்வேறு நிலப்பகுதிகளில் பனை வளர்ந்து இருப்பதை நாம் காண முடியும், குறிப்பாக கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரங்களிலும், புறம்போக்கு நிலங்களிலும், சதுப்பு நிலப்பகுதியிலும், தேரிக்காடுகளிலும் ஏராளமான பனை மரங்கள் இருக்கின்றன. மேலும் பனை மரங்கள் கடல் மட்டத்திலிருந்து 500 முதல் 800 மீட்டர் உயரம் வரை தடையின்றி வளர்கின்றன.

 பனையின் வளர்ச்சி தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தை தவிர்த்து ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக இருப்பினும் கடற்கரை பகுதியில் நாம் பனை நடவை மேற் கொள்வதற்கான காரணம், நாம் கட்டமைத்து வைத்த பேரழிவு கடற்கரை கட்டுமானங்கள் தான், குறிப்பாக இந்தியாவின் கடற்கரைகள் மிகவும் அபாய கட்டத்தில் இருக்கின்றன, சராசரியாக ஆண்டுக்கு ஓர் புயல் என ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் பேரிடர் இழப்புகளே அதற்கு சாட்சியம் அளிக்கிறது, (கடுமையான கடல் சீற்றத்தால் காணாமல் ஆக்கப்பட்ட தனுஸ்கோடியின் நிலையே சிறந்த உதாரணம்).

  முதலில் கடற்கரைகள் இயற்கையால் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலன கடற்கரைகள் இந்தியாவின் பெரும் நதிகள் கொண்டு வரும் மணல் கொண்டே உருவாக்கப்படுகிறது. பொதுவாக இந்தியாவில் இரு பருவ காற்றுகள் இருப்பதை நாம் அறிவோம், வடகிழக்கு மற்றும் தென்மேற்கு காற்றுகள் முறையே வருடத்தின் எட்டு மாதம் கடல் அலைகளை தெற்கில் இருந்து வடக்கு நோக்கியும் அடுத்த மாதங்களில் காற்று அலைகளை வடக்கில் இருந்து தெற்கு நோக்கியும் கடற்கரை மணலை நகர்த்தும், பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த மணல் நகர்வு நடந்து கொண்டே இருந்ததால் கடற்கரைகள் உருவாக்கப்பட்டன.

இந்த இயற்கையான மணல் நகர்வால் நம் கடற்கரையில் பல்வேறு இடங்களில் புவியியல் அமைப்புக்கு ஏற்ப மணல் மேடுகள் உருவானது. இந்த மணல் மேடுகள் தான் கடல்நீரை நிலத்தடி நீருடன் சேர்க்க விடாமல் இயற்கை வடிகட்டியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் இந்திய கடற்கரைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வரமற்ற கட்டுமானங்களால் ( பெரிய துறைமுகங்கள், தொழிற்சாலைகள், சுற்றுலா தலங்கள், சொகுசு விடுதிகள்....)  கடற்கரையும், மணல் மேடுகளும் தம் உறுதி தன்மையை வேகமாக இழந்து வருகிறதை பார்த்தோம்.

 தென்னிந்தியாவின் அழகிய கடற்கரை நகரமான புதுசேரியின் கடற்கரையில் நாம் இப்போது பார்க்கின்ற அழகற்ற கற்குவியளுக்கு பதிலாக ஒருகாலத்தில் அழகான விசாலமான கடற்கரை இருந்தது உண்மையே, பின் அந்த கடற்கரைக்கு என்ன ஆனது…? அது ஏன் மறைந்து போனது…? புதுச்சேரி அதன் வர்த்தகத்திற்காக அம்மாநிலத்தின் தெற்கு பகுதியின் கடற்கரையில் ஒரு துறைமுகத்தை கட்டியது, இதனால் நாம் மேற்கூறிய பருவ காற்றுகள் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி மணலை செலுத்த முடியாமல் போனது, ஏற்கனவே துறைமுகத்தின் வடக்கில் இருந்த மணலை அலைகள் நகர்த்தி சென்று விட்டதாலும் அதை ஈடு செய்ய தெற்கில் இருந்து புதிய மணல் வராததாலும், புதுச்சேரியின் நான்கு கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை முற்றிலும் அழிந்தே போனது, மேலும் இந்த கடல் அரிப்பு அண்டை மாநிலமான தமிழகத்திற்கும் கடத்தப்படுகிறது.

   இந்த கடற்கரை கட்டுமானங்கள் ஒரு புறம் அழிவை ஏற்படுத்த மற்றொரு புறம் பல ஆண்டுகளாக கடற்கரைகளில் இயற்கை அரணாக இருந்த பனைமரங்கள் மற்றும் அலையாத்தி காடுகள் இன்று மிக வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன, கடலும் கடல் சார்ந்து வாழும் மனிதர்களின் வாழ்விலும், சூழலியல் சமன்பாட்டை பேணுவதிலும் அளவற்ற பயனை கொடுத்து வந்தது இந்த கடற்கரை காடுகளே. ஆனால் நீங்கள் இந்த கட்டுரையை வாசித்துக் கொண்டிருக்கும் போது கூட ஏங்கோ ஒரு பனை மரமும், ஏதோ ஒரு அலையாத்தி மரமும் அழிக்கப்படுகிறது என்பதே உண்மை செய்தியாக உள்ளது.

பனை மரத்தை ஏன் கடற்கரையில் நட வேண்டும்:-

 பனை மரங்களின் அதிசிறப்பே அதன் வேர் அமைப்பு தான், பல்வேறு படிநிலைகளை கொண்ட தன் வேர்களை நிலத்தின் குறிப்பிட்ட ஆழத்திற்கு அனுப்பி மண்ணை இறுக்கமாக பற்றிக் கொள்ள செய்கிறது, இதுவே புயல் மற்றும் வெள்ள பாதிப்பில் இருந்து மக்களையும் மற்ற உயிர்களையும் பாதுகாக்கிறது, சிறந்த உதாரணம் 2018 ஆம் ஆண்டு கஜா புயல் பாதிப்பு, இந்த புயலின் போது தான் இயற்கை நமக்கு சில படிப்பினையை கொடுத்தது, இம்மண்ணுக்கான தாவரத்தை இயற்கை அடையாளப்படுத்தி விட்டு போனது அதில் முக்கியமானது தான் பனை மரம். அந்த புயலின் போது பனை மரமும் பாதிக்க தான் செய்தது ஆனால் தென்னை அல்லது மற்ற அயல் மரங்களை போன்ற பெரும் சேதத்தை அது ஏற்படுத்தவில்லை, கடற்கரைகள் மற்றும் அதனையோட்டி வாழும் மக்கள்களின் வீடுகள் பெரும்பாலும் குடிசை வீடாக அல்லது பலவீனமானதாக தான் இருக்கும். அவைகள் சிறிதாக ஏற்படும் கடற் சீற்றத்தில் கூட பாதிக்கப்படும் அல்லது முற்றிலும் அழிந்து போகும், அந்த மக்களின் பாதுகாப்பை பனை போன்ற வலிமையான தாவரங்களே உறுதி செய்கின்றன. மேலும் மீன் பிடி தொழிலில் பனை பல்வேறு வகைகளில் தன் பங்களிப்பை கொடுத்து வருகிறது. குறிப்பாக பனையை வெட்டி மேடை போன்று அமைத்து அதன் மேல் மீன் பிடி வலைகளை உலர்த்துகின்றனர்,  கடற்கரை கழிமுகங்களில் உள்ள பழங்குடி மக்கள் பாரம்பரியமாக இறால் பிடிக்க பறி என்ற பனை ஓலையில் செய்யப்பட்ட சிறிய பையை பயன்படுத்துகின்றனர், உப்பளங்களில் உப்பை அள்ளிக்கொட்ட பனை நாரினால் செய்யப்பட்ட கூடையை பயன்படுத்துகின்றனர்.

கடற்கரையில் வசிக்கும் எளிய மக்கள் தான் பருவநிலை மாற்றத்தின் பாதிப்பை முதலில் உணர போகிறார்கள், அவர்களுக்கு மீட்பராக இருப்பது பனையும், கடற்கரை காடுகளும் தான், குறிப்பாக தமிழக கடலோர பகுதிகளை காப்பாற்ற குறைந்தது 1 கோடி பனை மரங்களையாவது நாம் அடுத்த பத்தாண்டுகளுக்குள் விதைத்தாக வேண்டும், ஆறுகள் கடலில் சேரும் போது அதன் கழிமுகத்தில் உண்டாகும் பகுதியில் அலையாத்தி காடுகளின் பரப்பளவை அதிகரிக்க வேண்டும், அதனை மிகவிரைவாக செய்தாக வேண்டும் ஏனெனில் நம்முடைய நாட்கள் எண்ணப்பட்டு கொண்டிருக்கின்றது.

--பனைசதிஷ்
9994969088

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்